Friday, April 30, 2010

யோகாசனம்





சித்தர்கள் அருளிய யோகாசனம்

தமிழ் மருத்துவ முறையில் கற்பம் மருந்துகள் முதன்மையானது. இது சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை. கற்பம் என்பது உடம்பினை நோயுறாதபடி நல்ல நிலையில் வைத்திருந்து நரை,திரை, மூப்பு அறிய நல்லுடலைப் பெற்றவர்கள்.
மனிதன் இல்லறத்தானாயினும் துறவரத்தானாயினும் உடலைப் பேணுதல் முதன்மையானது. இதனை திருமூலர் தம் திருமந்திரத்தில் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார்.
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திறம்பட மெய்ஞானம் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.
உடலை காப்பது கற்பம். இது உடலை கல்லைப் போலாக்கும். கல்லினால் செய்த சிலை பன்னேடுங்காலமானாலும் நரை, திரை, மூப்பு,பிணி அடைவதில்லை. கற்பம் உண்டால் காயம் அழியாது என்கிறார் திருமூலர்.
கற்பம் பொது, சிறப்பு என இருவகைப்படும். பொதுக்கற்பம் உடலை கத்து, மேனிக்கு எழிலும் பலமும் தந்து நரை, திரை, சாக்காடு வராமல் தடுக்கும். சிறப்புக்கற்பம் உடல் உருப்புக்களிலாவது உடல் முற்றுமாவது கண்ட பிணியை நீக்கி உடலுக்கு வலிமையை தந்து பலம் ஊட்டும்.
யோகாசனம்
சிவயோகம் என்னும் இராஜயோகம் பண்ணுங் காலத்துச் சித்தாசனம் என்னும் ஆசனமும், இல்லறத்தாருக்கு அவர்கள் வாயுதாரனை என்னும் உயிர்ப்பு பண்ணும் காலத்து பத்மாசனமும் சிறந்ததென்று யோக நூல்கள் கூறுகின்றன.
பொதுவாக ஆசனங்கள் யாவும் உடற்பயிற்சி போன்றவையே என்றாலும் உடற்பயிற்சிகளில் இருந்து செயலிலும் நிலையிலும் வேறுபடுகின்றன. பொதுவான உடற்பயிற்சிகள் உடலின் மேற்புறமுள்ள உடல் தாதுக்களையே வலிமைபடுத்துகின்றன. ஆனால் யோகாசனங்கள் உடலின் உள்உறுப்புகளையும் வலிமைப்படுத்துகின்றன.
ஆசனங்கள் தொகையால் எண்ணற்றன. இதனை திருமூலர் 'பல் ஆசனம்'- எண்ணிலா ஆசனம் என்று குறிப்பிடுவதால் அறியலாம்.
இருப்பினும் இவற்றுள் இன்று ஒரு சில ஆசனங்களே நடைமுறையில் உள்ளன. திருமூலர் தம் தமிழ் மூவாயிரத்தில் பதுமாசனம், பத்திராசனம், உக்கடாசனம், சிங்காசனம், சொத்திராசனம், வீராசனம், கோமுகாசனம் என்று சிலவற்றை மட்டுமே கூறியுள்ளார். இதில் பத்திரம்,வீரம், பதுமம், கோமுகம்,உக்கடம் ஆகிய ஐந்து ஆசனங்களும் ஞான சாதனைக்குரிய ஆசனங்களாகும்.
ஆசனபலன்யோகாசனப் பயிற்சியினால் உடல் உள்ளுறுப்புகள் பலம் அடைகின்றன. உடலில் வீணான சதைப்பிடிப்புகள் உண்டாவதில்லை. உடல் அழகுடன் திகழ்ந்து நோயின்றியும் வலுவுடனும் விளங்கும். உடல் முழுமைக்கும் ரத்த ஓட்டத்தை சீராக்கும். சுறுசுறுப்பு, புத்தி தெளிவு, நினைவாற்றல், மனத்தூய்மை முதலியன ஏற்படும். மேலும் உடலில் நோய்நொடிகள் உண்டாகாமல் தடுக்கின்றது. வந்த நோய்களையும் போக்குகின்றது.
மேடு பள்ளம் இல்லாத சமதளத்தில் யோகாசனம் செய்யவேண்டும். நிமிர்ந்து நேராக இருந்து ஆசனங்கள் செய்யவேண்டும். பயிற்சிகளை மெதுவாகவும்,நிதானமாகவும் செய்யவேண்டும்.
கோபம் தவிர்
பொதுவாக மனம் ஒருநிலையில் இருப்பதில்லை. மனதை ஒருமைப்படுத்தும் எண்ணத்துடனேயே நம் முன்னோர்கள் இறைவழிபாடு, தவம் முதலியன செய்தனர். ஒவ்வொரு உடலுருப்புடனும் இணைக்கப்பட்டிருக்கும் நரம்பு உணர்சிகளை மனம் சார்ந்துநிற்கின்றது. அதனால்தான் அளவுக்கு மீறிய கோபம் ஏற்படும்போது கண் சிவந்து உடல் சூடாகிறது. கோபம் தணிந்ததும் களைப்பும் சோர்வும் ஏற்படுகிறது. மனதில் சோர்வு ஏற்பட்டால் உடலும் தளரும். ஒன்று வலிவு பெறும்போது மற்றதும் வலிவுபெரும். மனம் தூய்மையானால் அது உடலுக்கு கேடு விளைவிப்பதில்லை நன்மையையே உண்டாக்கும். உடலை நல்ல நிலையில் வைத்திருக்க மனத்தூய்மை வேண்டும். மனதால் உண்டாகும் காமம், வெகுளி, மயக்கம், ஆசை(அவா) துன்பம் ஆகியன நீங்கின் உடலில் பிணி சேராது.
இதனால் தான்,
மனமது தூய்மையானால்
மந்திரம் செபிக்கவேண்டாம் என்றனர் ஆன்றோர்.